ஆப்பிரிக்க தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று (19) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவிற்கும் (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பொன்று நேற்று (19) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தென்னாபிரிக்க ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தன்சானியா பிரதமர் காசிம் மஜலிவாவும் ( Kassim Majaliwa ) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், பஹமாஸ் பிரதமர் பிலிப் ஈ. டேவிஸ் ( Philip E. Davis), எத்தியோப்பியா பிரதமர் அபே அஹமட் (Abiy Ahmed), பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதா (Mariam Chabi Talata), ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து, இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் இச்சந்திப்புக்களின் போது கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Related Posts