இரட்டைக் கொலை ; நடந்தது என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்து கொண்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொலைக் காட்சிகளிலும் வானொலிகளிலும் முதன்மை செய்திகளாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

தனது இரு விசேடதேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில  மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்த நிலையில்  மனைவியின்  இழப்பு தன்னை  வெகுவாக  பாதித்திருந்ததாகவும் இதனால்  எனது பிள்ளைகளை பராமரிப்பதற்கு  சிரமமாக இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு செயற்பட்டதாக தனது வாக்குமூலத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா வீதியை சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது மிர்சா முகமது கலீல் தெரிவித்திருக்கின்றார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு  மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா  வீதியில் உள்ள வீடு ஒன்றில் வியாழக்கிழமை (14) காலை 8 மணியளவில் குறித்த  இரட்டை கொலை  இடம்பெற்றுள்ள நிலையில் தகவல்கள்  வெளியாகி அதிகளவான மக்கள்  அவ்விடத்தில் ஒன்று கூடி இருந்தனர்.
 
அங்கு நடந்தது என்ன?

குறித்த வீட்டில் மனைவியின் இழப்பின் பின்னர் தனது இரு விசேடதேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து  வந்த  தந்தையான 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது மிர்சா முகமது கலீல் என்பவருக்கு வாழ்க்கையில்  விரக்தி வந்திருக்கும் நிலை அவரது அண்மைக்கால செயற்பாட்டில் உணர முடிகின்றது.

அதாவது தனது மனைவியின் நோய் கால கட்டத்தில் அவரை பராமரிக்க மற்றும் வைத்தியசாலைக்கு அழைத்து  செல்வதற்கு ஒரு சிற்றூர்தியை கொள்வனவு செய்திருந்தார். இந்த சிற்றூர்தியை சம்பவ தினத்திற்கு முன்னர் மற்றுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்திருந்ததாகவும் மறுமணம் செய்வதற்கு ஆர்வமாக அவர் இருந்த போதிலும் தனது இரு மனநலன் குன்றிய பிள்ளைகளை சுட்டிக்காட்டி தடைபட்டதாகவும்  அமைதியான மென்மையான  போக்குள்ள அமைதியான ஒரு மனிதன் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனை  விட தந்தையினால் கொல்லப்பட்ட இரு பிள்ளைகளும் அப்பகுதியில் உள்ள வலது குறைந்த பிள்ளைகளை அனுமதிக்கும்  ஹியூமன் லிங்க்  பாடசாலைக்கு கல்வி கற்பதற்கு அனுமதித்திருந்தார். இருந்த போதிலும் அவரது மனைவியின் இறப்பின் பின்னர் அப்பிள்ளைகளை அப்பாடசாலைக்கு அனுப்புவதை இடை நிறுத்தி கொண்டார்  என்ற மற்றுமொரு தகவலும் வெளியாகி இருந்தது.

மேலும்  6 பேர் இக்குடும்பத்தில் படுகொலை செய்யப்பட்ட இரு விசேடதேவையுடைய பிள்ளைகளை தவிர  வெளிநாடுகளில் தொழில் புரிந்த ஏனைய இரு பிள்ளைகளும்  அண்மையில் மரணமடைந்த  தாயின்  மரண சடங்கில்   வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து கலந்து கொண்ட  கதையும் விசாரணையில் வெளியாகி இருந்தது.

இவ்வாறான நிலையில் 29 வயது மதிக்கத்தக்க முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் தினமும் அருகில் உள்ள மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா மஸ்ஜிதில் தனது ஐவேளை தொழுகையையும் விடாமல் செய்து இறைபணியை முன்னெடுத்தவர் என்பதுடன் வலது குறைந்த இயக்கத்தை கூட மறந்து வழமையாக ஏனைய மக்களோடு இணைந்து செயற்படுபவர் என மக்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

இரட்டை கொலை எவ்வாறு  நடைபெற்றது?

குறித்த வீட்டில் இருந்த இரு பிள்ளைகளும் படுக்கையில் வைத்தபடி பல வகை கத்தி வகைகளை கொண்டு திடிரென கழுத்தால் வெட்டிய தந்தை சம்பவத்தை கைத்தொலைபேசி ஊடாக தனது சகோதர, சகோதரிகளுக்கு அறிவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் சம்பவ வீட்டிற்கு உடனடியாக வந்த சகோதர சகோதரிகள் அங்கு கண்ட காட்சியை கண்டு அபயக்குரல் எழுப்பியதுடன் கத்தியோடு கொலை செய்து காணப்பட்ட தனது சகோதரனை அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொதுமக்களின் உதவியுடன்  அழைத்து சென்றனர்.

பின்னர் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்துடன் காணப்பட்ட முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோரின் நிலை கண்டு  அவ்விடத்தில் வந்திருந்த உறவினர்கள், மக்கள் தங்களை அறியாமல் இந்த நோன்பு(ரமழான்) மாதத்தில் இவ்வாறு நடந்து விட்டதே என கதறி அழுது  பெரிய நீலாவணை பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸாரின் நடவடிக்கை

சம்பவம்  தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார்  சடலங்கள் காணப்பட்ட வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை வழங்கினர். தடயவியல் பொலிஸாரும், மோப்பநாய் பிரிவினரும்  சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது. பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு இறுதியாக பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலை அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் இரவு உறவினர்களிடம் இரு சடலங்களும்   கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து இரு சகோதரர்களின்  வருகைக்காக காத்திருப்பதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான் - Journalist


இளைஞன் கடத்தலுக்கு கடற்படையினர் உதவி | Thedipaar News

Related Posts