கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் மரணம்; இருவர் தப்பி ஓட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாரம்மல பகுதியில் கொள்ளையர்கள் குழு மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் ஐபோன் விற்பனை தொடர்பில் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரங்களை அடுத்து கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் இருந்து கொள்ளையர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விளம்பரத்தைப் பார்த்து ருவன்வெல்ல பகுதிக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களுக்கு விளம்பரம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் அதிகாரிகளுடன் கொள்ளையர்களை சந்திக்கச் சென்றுள்ளனர்.

நாரம்மல பகுதியிலுள்ள இடத்திற்கு வருமாறு கொள்ளையர்கள் தெரிவித்ததோடு, குறித்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் அவர்களது காரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட கைகலப்பின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிசூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் ஒரு கொள்ளையர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இரண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர் கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (P)


Related Posts