இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஐ.எம்.எப் பாராட்டு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சீர்த்திருத்தங்கள் மற்றும் சிறந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றமைக்கு சர்வதேச நாணய நிதிய பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்  (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஷெஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

IMF வேலைத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இலங்கை அடைந்த வெற்றியை தொடர்ந்தும் ​பாதுகாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மைய சமூக – பொருளாதார முன்னேற்றங்கள், சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாரிய பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் திட்டங்களை தொடர்வதற்கான இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு தொடர்பில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதன்போது தௌிவுபடுத்தியிருந்தார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனையும் ஷெஹான் சேமசிங்க சந்தித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணைக்கான மீளாய்வுகளை நிறைவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரையும் அரையாண்டு மாநாட்டின் போது சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

உலக வங்கியின் உள்ளக மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் இலங்கை போன்ற நாடுகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்து பரமேஸ்வரன் ஐயர் விளக்கமளித்ததுடன், இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட குழுவினர் சர்வதேச புரிந்துணர்விற்கான பொருளாதார பேரவையின் கூட்டத்திலும் கலந்துகொண்டதையடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. (P)


Related Posts