கொத்து ரொட்டி பார்சல் விலை ரூ.1900: புதுக்கடை உணவகத்தின் உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அண்மைய நாட்களாக சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது மட்டுமல்ல அவர்களை உள ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகிறது.

அந்தவகையில், ஒரு உளுந்து வடைக்கும் ஒரு கப் தேனீருக்கு 1000 ரூபா கோரப்பட்ட சம்பவம் கடந்த வாரம் களுத்துறையில் பதிவாகியிருந்தது.

குறித்த தொகை நியாயமற்றது என அந்த வெளிநாட்டவர் உறுதியாக நின்ற நிலையில் 800 ரூபா அறவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு – புதுக்கடை பகுதியில் உள்ள வீதியோர உணவகமொன்றில் கொத்து ரொட்டி பார்சல் ஒன்றுக்கு 1900 ரூபா கோரிய சம்பவம் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம், தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன், விமர்சனங்களும் முன்வைக்கபட்டன.

அத்துடன், குறித்த உணவாக உரிமையாளர் வெளிநாட்டவரிடம் அநாகரிகமான முறையிலும் நடந்துகொண்டதனை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையிலே, வெளிநாட்டவருக்கு அதிக விலையில் உணவு விற்பனை செய்ய முயன்ற உணவாக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸாரினால் குறித்த நபர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 ஐச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். (P)


Related Posts