அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. மெக்சிகோவும் சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரிவிதிப்போம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "ஐரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே வரிவிதிப்பு எப்போது என்ற சொல்ல மாட்டேன். ஆனால், விரைவில் நடக்கும்" என்று தெரிவித்தார்.இந்நிலையில் டிரம்ப் தங்கள் மீது வரிவிதித்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.