லசந்த படுகொலை;பிரதான சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

த சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி மற்றும் முன்னாள் டிஐஜி உட்பட மூன்று நபர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தனது சட்ட ஆலோசனையை வழங்கியுள்ளார். ஜனவரி 27, 2025 அன்று சிஐடி தலைவருக்கு சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவினால் அனுப்பப்பட்ட ஆலோசனைக் கடிதத்தில், நீதவான் விசாரணை வழக்கு எண் B/92/2009 தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட முன்னாள் சர்ஜென்ட் பிரேம் ஆனந்த உடலகம,கல்கிஸ்ஸை பொலிஸின் முன்னாள் குற்றப்பிரிவு அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் ஓய்வுபெற்ற மூத்த டிஐஜி பிரசன்ன நாணயக்கார ஆகிய மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தரப்பு விரும்பவில்லை என்று கூறினார் தெரிவிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாகக் கூறி மூன்று சந்தேக நபர்களும் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் பிணையில் வெளியே உள்ளனர். சட்டமா அதிபரின் கடிதத்தின் பிரதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் 14 நாட்களுக்குள் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேலும் அறிவுறுத்தினார். கூடுதலாக, 2009 ஆம் ஆண்டு ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பாக உடலகம ஒரு சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். (P)

Related Posts