அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் போர் இழப்பீட்டு விவகாரத்தை ஒரு முக்கிய அங்கமாக சேர்க்க ஈரான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போரினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முதற்கட்ட மதிப்பீடாக சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈரான் நிர்ணயித்துள்ளது.
ரஷ்ய ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள ஈரான் அரசாங்கப் பேச்சாளர் பாத்திமா மொஹஜெரானி, போரினால் ஏற்பட்ட கட்டடச் சிதைவுகள் மற்றும் தொழிற்சாலைகள் முடங்கியதால் ஏற்பட்ட வருமான இழப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் அமெரிக்காவுடன் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இழப்பீட்டு விவகாரம் உத்தியோகபூர்வமாக எழுப்பப்பட்டதாக ஈரான் அரசு ஊடகமான IRNA உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தானில் நடைபெற்ற சந்திப்பில் காத்திரமான விவாதங்கள் இடம்பெற்ற போதிலும், இதுவரை எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரான் கோரியுள்ள இந்த பிரம்மாண்டமான நஷ்டஈட்டுத் தொகை அமெரிக்காவுடனான அடுத்தகட்ட ராஜதந்திர உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Font size:
Print
Related Posts
