யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மயிலிட்டி பகுதியிலுள்ள இராணுவத் தளபதிகளின் பங்களா முன்பாக இன்றைய தினம் (01) குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை இன்றும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் தற்போதும் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதால் காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த இடத்துக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அந்த மக்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைப்பதாகவும் இந்த போராட்டத்திற்கு தான் பூரண ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts
