ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானிய கொடியுடன் பயணித்த எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார மற்றும் கடல்சார் முற்றுகையை மீறி, ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற கப்பல் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவ அதிகாரப்பூர்வ தகவலின்படி, 'M/T ஹஸ்னா ' என்று பெயரிடப்பட்ட அந்த எண்ணெய் கப்பல், அமெரிக்காவின் தடையை மீறி ஈரானிய துறைமுகத்திற்குள் நுழைய முயன்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கக் கடற்படையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்த போதிலும், கப்பல் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்கப் படைகள், கடற்படை போர் விமானம் மூலம் கப்பலின் இயந்திரப் பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகளால் (Cannon Gun) சரமாரியாகச் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலில் 'M/T ஹஸ்னா' கப்பல் பலத்த சேதமடைந்து கடலிலேயே செயலிழந்து நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்துப் பதிவிட்டுள்ள அமெரிக்க இராணுவம், "ஹஸ்னா கப்பல் இனி ஈரானை நோக்கிப் பயணிக்காது. ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள முற்றுகை இன்னும் முழு நடைமுறையில் உள்ளது," எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Font size:
Print
Related Posts
