கபில சந்திரசேன மரணம் – விசாரணையில் புதிய தகவல்கள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்த சம்பவம் அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு, பல மணி நேரம் தனது சட்ட வழக்கு குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறுநாள் காலையில் கபில சந்திரசேன தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைய இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் உயிரிழந்த நிலையில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கபில சந்திரசேன  இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் மனைவியின் சகோதரியை திருமணம் செய்தவர் என்பதால், கொள்ளுப்பிட்டியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு 14 எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் 54 நாட்களாக சிறையில் இருந்த கபில சந்திரசேனாவுக்கு 5ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடன் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

5 லட்சம் ரொக்கப் பிணையும், ஒரு கோடி ரூபாய்க்கு இரண்டு சரீர பிணைகளும் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பிணைத்தாரர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு பிணை வழங்க முன்வந்தவர்கள் உறவினர்கள் அல்ல எனவும் அவர்கள் 15,000 ரூபாவிற்கு கூலிக்கு அமர்த்தப்பட்ட போலியானவர்கள் எனவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

போலிப் பிணையாளர்களை முன்னிலைப்படுத்தியதன் மூலம் நீதிமன்றத்தை ஏமாற்றியதாகக் கூறி, அவரை உடனடியாகக் கைது செய்து வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்  கபில சந்திரசேனவைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையைத் தடுத்து நிறுத்துவதற்கான மனு ஒன்றைத் தாக்கல் செய்யும் நோக்கில், அவரது சட்டத்தரணி நேற்று காலை கபில சந்திரசேனவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது கபில சந்திரசேன தங்கியிருந்த அறை மூடப்பட்டிருந்ததால், மேலதிக சாவியைப் பயன்படுத்தி அறையைத் திறந்தபோது அவர் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து 119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், மரணப் பரிசோதனைக்கான சாட்சிகளை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அன்னாரது உடலத்தை அவரது மனைவியின் மூத்த சகோதரியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 தற்போது அவரது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களிலும் உயர்மட்டப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி