கனடாவின் யார்க் பிராந்தியத்தின் வாஸ் நகரில் மூன்று இடங்களில் நிறுவப்பட்ட ஒன்பது வேகக் கட்டுப்பாட்டு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யார்க் பிராந்திய போலீசார் (YRP) வெளியிட்ட தகவலின்படி, இந்த சம்பவங்கள் ஜனவரி 11 முதல் ஏப்ரல் 24 வரை இடைவெளிகளில் நடந்துள்ளன. பாதிக்கப்பட்ட கேமராக்கள் பெரும்பாலும் பீட்டர் ரூபர்ட் அவென்யூ, ஹில்டா அவென்யூ மற்றும் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் டிரைவ் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பள்ளிகள் மற்றும் அதிக பாதுகாப்பு தேவைப்படும் இடங்களுக்கு அருகில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக நிறுவப்பட்டிருந்தன. சேதம் ஏற்பட்ட ஒன்பது கேமராக்களும் 24 மணி நேரத்துக்குள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயல் பொதுச் சொத்துக்கே விளைவிக்கப்பட்ட சேதமாகும். இதற்கான பழுது பார்ப்பு செலவுகள் மக்கள் செலுத்தும் வரிப்பணியிலிருந்து மேற்கொள்ளப்படுவதால், இது தனிநபர் செயலில் முழு சமூகத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இவ்வகையான செயல்கள் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்பட்டவை என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 42 வயதான வாஸ் நகரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மீதமுள்ள சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தேவைப்படுவதாகவும், பொதுமக்கள் உதவியை YRP போலீசார் கேட்டுள்ளனர்.