ஜோதிடருக்கு அரசுப் பதவி..! மீண்டுமொரு சர்ச்சை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பல தடைகளையும் தாண்டி தமிழக முதலமைச்சராக விஜய்,பதவியேற்றதிலிருந்தே பல சர்ச்சைகள் வெளிவருகின்றன.

இந்தநிலையில்,தமிழக முதலமைச்சர் விஜய், தனது ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்பு அலுவலராக (OSD) நியமித்ததன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விஜய்க்கு மிகப்பெரிய தேர்தல் வெற்றி கிடைக்கும் என்று முன்கூட்டியே கணித்தவர் இவர்தான். இந்த நியமனம் பல தரப்பினரிடமும், குறிப்பாக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்களிடமும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கட்சியின் பேச்சாளராகவும் ஜோதிடராகவும் அறியப்படும் ராதன் பண்டிட், சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின் போது கட்சித் தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

மே 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கையின் போது, தவெக முன்னிலை பெற்றபோது, விஜயின் இல்லத்துக்குச் சென்ற முதல் நபராக ராதன் பண்டிட் இருந்ததாக கூறப்படுகிறது.

மூடநம்பிக்கைகள் மற்றும் ஜோதிடத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வந்த அரசியல் பின்னணியில் இந்த நியமனம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், "எனக்குப் புரியவில்லை. ஒரு ஜோதிடருக்கு ஏன் சிறப்பு அதிகாரி (OSD) பதவி தேவைப்படும்?? யாராவது விளக்க முடியுமா?" என்று கேட்டிருந்தார்.

"ஒரு மதச்சார்பற்ற அரசில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாண்புமிகு முதலமைச்சர் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்று விசிக பொதுச் செயலாளர் டி. ரவிக்குமார் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், “அறிவியல் சிந்தனையை வளர்ப்பது அரசின் கடமை. இன்று முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.

இந்த அறிவியல் சார்பற்ற நியமனத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்றும் விசிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

CPM மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம் பி., “ஜோதிட நம்பிக்கையை மக்களிடையே அதிகரிக்கும் வகையில் அரசு செலவில் இப்படிப்பட்ட நபரை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் ஆலோசகராக செயல்படுவதும் ஏற்க முடியாதது” என்று தெரிவித்துள்ளார். தென்னிந்திய அரசியலில் ஜோதிடர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவு புதிதல்ல.

ராதன் பண்டிட் வெற்றிவேல், முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஜோதிட ஆலோசகராக இருந்துள்ளார்.

அவரது ஆலோசனையின் பேரிலேயே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பல முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்லமாட்டார் என்ற கணிப்பு தவறியதையடுத்து இருவருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி