திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடி அருகே, சாலையின் மையத் தடுப்பில் மோதி நின்ற லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காவலர் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த 4 பேர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் முழு விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
