பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சரை நவ்ரங் பகுதியில் உள்ள பரபரப்பான சந்தையில் வழக்கம்போல மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த வேளையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது.
இந்த வெடிப்பால் சந்தை முழுவதும் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் அரசு, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் அண்மைக் காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நாட்டில் மீண்டும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
