மியான்மரின் வடக்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் சீன எல்லைக்கு அருகிலுள்ள ஷான் மாகாணத்தின் நாம்காம் நகரை அண்மித்த கங்ட்அப் கிராமத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக பெருமளவில் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடம் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
வெடிப்பின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், குறித்த கட்டிடத்துடன் அருகிலிருந்த பல குடியிருப்புகளும் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மீட்புப் படையினர் மற்றும் அவசர சேவை அணிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மியான்மரில் தொடர்ச்சியாக நிலவி வரும் உள்நாட்டு மோதல்களுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த வெடிவிபத்து அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
