கொழும்பை உலுக்கிய துயரச் சம்பவமாக, மீகொட பகுதியில் வெசாக் தானசாலையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை ஒருவரை உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கோர விபத்து நேற்றிரவு ஹோமகம – மீகொட சந்திப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாடகைக் கார், தானசாலையில் உணவு பெற வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் உள்ளிட்ட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 7 பேர் ஹோமகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு சிறு குழந்தையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற வாடகைக் காரின் சாரதி பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அந்த சாரதி, விபத்து நிகழ்ந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெசாக் பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஒன்றுகூடியிருந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
