திருகோணமலை துறைமுக வரலாற்றில் புதிய சாதனை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திருகோணமலை துறைமுக வரலாற்றில் முதன்முறையாக, கடந்த மே 29ஆம் திகதி அஷ்ரப் கப்பல்துறையில் ஒரே நேரத்தில் மூன்று சரக்குக் கப்பல்கள் நங்கூரமிட்டு, தமது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து திருகோணமலை இலங்கை துறைமுக அதிகாரசபையின் வதிவிட முகாமையாளர் சரத் குமார விடுத்துள்ள அறிக்கையில், முதலாம் கப்பல்துறையில் நங்கூரமிட்டிருந்த 'AAL BANGKOK' என்ற கப்பலானது, மன்னார் காற்று மின் உற்பத்தி நிலையத்திற்காகக் கொண்டுவரப்பட்ட 05 பிரம்மாண்ட காற்றுச் சுழலிகளைஇறக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு கப்பல்துறையில் நங்கூரமிட்டிருந்த 'HAI LONG 1' என்ற கப்பல், டுபாயிலிருந்து கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள 17,000 தொன் கட்டுமான இரும்பு கம்பிகளை கையாளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இவற்றுடன், 'UNIWELL' என்ற மற்றுமொரு கப்பல், இந்தோனேசியாவிலிருந்து 'இன்சீ சிமெண்ட்' நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட 55,000 தொன் நிலக்கரியை அஷ்ரப் கப்பல்துறையின் தனியானதொரு பகுதியில் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்திற்கு ஒரே நேரத்தில் மூன்று கப்பல்கள் வருகை தந்து, நங்கூரமிட்டு, இவ்வாறான உத்தியோகபூர்வ சரக்குக் கையாளல் நடவடிக்கைகளை ஒரே காலப்பகுதியில் முன்னெடுத்தமை இதுவே முதற்தடவை என வதிவிட முகாமையாளர் சரத் குமார உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி