ஈராகில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக் நாட்டின் பசுரா மாகாணத்தைச் சேர்ந்த 41 பேர், ஆன்மிக பயணமாக நஜப் நகரில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்திற்கு சென்று வழிபாடுகளை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த பேருந்து, நசிர்ஹாய் நகருக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குப் பின்னர் பேருந்து தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 20 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பியதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் தொடர்பாக ஈராக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
