சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த உள்நாட்டு மோதலில், அண்மைக் காலமாக டிரோன் தாக்குதல்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற டிரோன் தாக்குதல்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய உயர் ஆணையர் வோல்கர் டர்க், சூடானில் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால் மோதல்களும் மனிதாபிமான நெருக்கடியும் மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுடன் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்து வருவதாக அவர் கவலை வெளியிட்டார்.
சூடானில் நீடித்து வரும் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச சமூகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
