கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பிரபல நீர் பூங்காவில் ஏற்பட்ட மின்கசிவு விபத்தில் 12 மாணவர்கள் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில்லிவாக் பகுதிக்கு அருகிலுள்ள ‘கல்டஸ் லேக் நீர் பூங்கா’ எனப்படும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு, ‘மினிகாடா’ நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக சென்றிருந்தனர்.
அங்குள்ள ஒரு விளையாட்டு பகுதிக்குள் நுழைவதற்காக மாணவர்கள் வரிசையில் காத்திருந்தபோது திடீரென மின்சாரக் கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக 12 மாணவர்கள் காயமடைந்ததுடன், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ஸ்டீனன்பெர்க், ஆரம்பக்கட்ட விசாரணைகளில் மின்சாரக் கோளாறே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்து ஏற்பட்ட நேரத்தில் எந்த மாணவரும் தண்ணீரில் அல்லது விளையாட்டு சாதனங்களில் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வரிசையில் நின்றிருந்த மாணவர்கள் அங்கிருந்த இரும்புத் தடுப்புக் கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள நிர்வாகம், மேலதிக விசாரணைகளுக்காக நீர் பூங்கா அடுத்த 48 மணிநேரங்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிகப்பெரிய நீர் பூங்காவில் ஒன்றாகக் கருதப்படும் இந்த பூங்கா, அன்றைய தினம் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்த போதிலும், பள்ளி மாணவர்களின் சுற்றுலாவிற்காக மட்டும் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
