யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் ஐக்கிய இராச்சியத்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு, மதிப்புமிக்க பிரிட்டிஷ் 'நைட்' பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பான மற்றும் புகழ்பெற்ற சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு விழாவில் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் 'நைட்'பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதின் மூலம், அவர் எதிர்காலத்தில் 'சர்' என்ற பட்டத்தைப் பயன்படுத்தத் தகுதி பெறுவார். உயர் கல்வித் துறைக்கு, குறிப்பாக கல்வியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக, 2026 ஆம் ஆண்டுக்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் பேராசிரியர் கனகராஜாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வின் போது, பாரம்பரிய வழக்கப்படி முழங்காலிட்டிருந்த பேராசிரியர் கனகராஜின் தோள்களில் வாளினால் தொட்டு, பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் அவருக்கு உத்தியோகபூர்வமாக இந்த கௌரவத்தை வழங்கினார்.
1966-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா, மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். தந்தை கனகராஜா யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும், தாயார் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் செயற்பட்டிருந்தனர்.
சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவானார்.
அங்கு 1989 மற்றும் 1993 ஆம் ஆண்டுகள் முறையே இளங்கலை மற்றும் கலாநிதி பட்டங்களை நிறைவு செய்தார்.
இவர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி தொடக்கம் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் நபரும் பேராசிரியர் நிஷான் கனகராஜா ஆவார்.
தமிழர் ஒருவராக உலக உயர்கல்வித் துறையில் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான ‘நைட்’ பட்டத்தைப் பெற்றுள்ள சர் நிஷான் கனகராஜாவின் இந்த சாதனை, இலங்கைத் தமிழர் சமூகத்திற்கும் உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.
