யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளை காலதாமதமின்றி துரிதப்படுத்தக் கோரி, பல்கலைக்கழக முன்றலில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்" அமைப்பின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில், "பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைக் கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்", "பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்", "குற்றத்தை மறைக்க சட்டத்தை ஆயுதமாக்காதே", "கண்ணியத்தை இழந்து கல்வியை பெறும் இடமா யாழ் பல்கலைக்கழகம்?", "தமிழர் பண்பாட்டைப் பேசும் பல்கலைக்கழகமே, பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன்?" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன.
விசாரணைகள் வெளிப்படையாகவும் விரைவாகவும் நிறைவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
Font size:
Print
Related Posts
