ஈரான் மீது மீண்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான்–இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த போதிலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஹட்செரிம் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமானப்படை பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய நெதன்யாகு, கடந்த இராணுவ நடவடிக்கைகளால் ஈரான் பலவீனமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஏமன் முதல் ஈரான் வரை தாக்குதல் நடத்தும் திறனை இஸ்ரேல் ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும், போருக்கான எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தங்களது படைகள் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்க மாட்டோம் என்றும், அவசியமெனில் மீண்டும் இராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என்றும் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
