உகாண்டா நாட்டில் 70 மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகளை மீறி ரெயில் வரும் தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றநிலையில் அந்த பேருந்து ஓட்டுநர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
முன்னதாக கல்வி சுற்றுலாவுக்காக ஜின்ஜா நகருக்கு சென்று கொண்டிருந்த 'ம்வெபாசா' (Mwebaza) உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது பயணிகள் ரெயில் மோதியது.
70-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து , ரயில் பாதையை கடக்க முயன்றபோது காலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. முகோனோவிலிருந்து கம்பாலா நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில் அப்பேருந்தின் மீது மோதியதில், அது கவிழ்ந்தது. விபத்து நடந்த இடத்திற்கு அவசரக்கால மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் இருந்த பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ரயில்வே கடவையில் பேருந்து ஓட்டுநர் போக்குவரத்து அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறியதே விபத்திற்கான காரணமாக தெரியவந்துள்ளது. கிராசிங்கிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பணியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, ஓட்டுநரை நிறுத்துமாறு சைகை காட்டியதாகவும், ஆனால் ஓட்டுநர் அந்த அறிவுறுத்தலை புறக்கணித்து ரயில் தண்டவாளத்தில் சென்றதாகவும், அங்குதான் இந்த மோதல் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
