மீட்க்கப்பட்ட 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.

மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.

கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியையும் நீட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் (STF) கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அது பலனளிக்காததால் வான்நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதி ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 60 துப்பாக்கிகள் தடயவியல் சோதனைக்காகப் பெறப்பட்டுள்ளன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், சிறைச்சாலையின் CCTV பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

கொலைக்குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறுமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை