பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டின் மீது கற்களை வீசியதுடன், தீ வைக்கவும் முயற்சித்ததாக காவல்துறையும் உள்ளூர் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் தெற்குப் பக்க இரும்பு வாயிலின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டதாகவும், தாக்குதலின் போது வீட்டின் பல ஜன்னல்கள் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் இருந்து இணையவழியாக உரையாற்றிய நிகழ்ச்சியில் சாகிப் அல் ஹசன் பங்கேற்ற சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, சாகிப் அல் ஹசனின் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
