’இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்’ – அமைச்சர் டயனா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க முடியும். அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவு நேரங்களில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவில் உணவகங்களைத் திறந்து வைப்பது உள்ளிட்ட இரவு நேரப் பொருளாதாரத்தை நாடுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் அதிகரிக்க முடியும். உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரத்தின் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, நம் நாட்டு மக்களும் இரவு நேரங்களில் உணவகங்களுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவதையே விரும்புவது வழக்கம். இதன்மூலம் விசேடமாக மதுவரி வருமானத்தையும் அதிகரிக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கிறது. ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும், அரச வருமானத்தை அதிகரிப்பது அவசியம்  என்றார். (p)


Related Posts