எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள் எனும் தொணிப்பொருளில் வடமாகாண ரீதியாக முப்படைகள் வசம்  இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தில் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது

வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்பட்டுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காணிக்கு செந்தகாரரான மக்கள் காணிகள் இன்றியும் வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்

இதன் அடிப்படையில் மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர் காணிகளை மக்களுக்காக விடுவித்து வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் காரியாலயத்திற்கு ஐயாயிரம் தபால் அட்டைகளை  அனுப்பி வைக்கும் முகமாக குறித்த நிகழ்வு இடம் பெற்று வருகிறது

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளால்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்வேறு காணிகளை சேர்ந்த மக்களை இணைத்து ஜனாதிபதிக்கான தபால் அட்டையை அனுப்பும் நடவடிக்கை நேற்று (07) இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற முக்கியமாக கேப்பாப்புலவு வட்டுவாகல்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமது  காணிகள் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ள   மக்களை இணைத்து குறித்த தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (07) இடம்பெற்றது

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னதாக காணி உரிமையாளர்கள் மெசிடோ நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சூழலியல் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினுடைய பிரதிநிதிகள் காணியை  இழந்த மக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து தபால் அட்டைகளை பூர்த்தி செய்த மக்கள் முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அங்கு தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Posts