பல்கலைகழகத்தில் தாக்குதல் ; இலங்கை மாணவன் வைத்தியசாலையில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குஜராத்தின் அஹமதாபாத்தின் பல்கலைகழக விடுதியில் பல  வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை இலங்கையை சேர்ந்த மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்த இலங்கை மற்றும் தஜிக்கிஸ்தானை சேர்ந்த இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் நடந்த தாக்குதலில் 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். விடுதி அறையில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

உஸ்பெகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் அவர்களின் அறையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு குழுக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி இருக்கும் ‘A’ தொகுதியில்  நடந்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அகமதாபாத் நகரின் கூடுதல் காவல் ஆணையர் கூறுகையில் “இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். காயம் ஏற்பட்ட வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். " என தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவத்தின் போது அங்கு இருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில் “நேற்றிரவு 11 மணிக்கு வெளியிலிருந்து வந்த சுமார் 10 -15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று எங்கள் விடுதி வளாகத்துக்கு வந்ததது. அவர்களில் மூன்று பேர் நாங்கள் தொழுகை செய்துகொண்டிருந்த போது எங்கள் விடுதி கட்டிடத்துக்குள் நுழைந்தனர். எங்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்று கூறிய அவர்கள் மத ரீதியிலான கோஷங்களை எழுப்பினர்.

அவர்கள் காவலாளியை வெளியே தள்ளிவிட்டு தொழுகை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். எங்களுக்கு உதவுவதற்காக முஸ்லிம் அல்லாத பிற வெளிநாட்டு மாணவர்கள் வந்தனர். அவர்களும் தாக்கப்பட்டனர். அங்குள்ள அறைகள் சூறையாடப்பட்டன. மடிக்கணணி, மொபைல் போன்கள் மற்றும் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன" என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோக்களின் படி குறைந்தது 5 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி குஜராத் காவல் துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் காவல் துறை குற்றப்பிரிவு இணை ஆணையர் (ஜேசிபி) ஆகியோருடன் ஒரு அவரச கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழகத்தில் தாக்குதல் ; இலங்கை மாணவன் வைத்தியசாலையில் | Thedipaar News

Related Posts