ஈரான் அதிபர் மரணத்துக்கு சதி காரணமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டு அதில் இருந்த அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்தாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அவற்றில் குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியுள்ளன. ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியுள்ளது. இதனால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என கேள்வி எழுந்துள்ளது.

காசாமுனையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 1ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானிய புரட்சிப்படை தளபதிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மாதம் 13ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது அதுவே முதல்முறையாகும். இந்த தாக்குதலை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தின. அதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் தேவை ஏற்பட்டால் இதைவிட பலமடங்கு பலம் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை, ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் சொந்தமாக முடிவெடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் 17ம் தேதி தெரிவித்திருந்தார். அவர் கூறிய 2 நாட்களில் (கடந்த மாதம் 19ம் தேதி) ஈரானின் இஷ்பஹான் நகரில் உள்ள விமானப்படைத்தளத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதேபோல், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் விமானப்படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அசர்பைஜான் சென்றுவிட்டு ஈரான் திரும்பியபோது அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கும் இப்ராகிம் ரைசி மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஈரான் அதிபரின் மரணத்தில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதித்திட்டங்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், 3 ஹெலிகாப்டர்கள் பயணித்த நிலையில் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீரும் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய ஒருமாதத்தில் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இது மொசாட்டின் சதித்திட்டமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடைபெற்றால் மட்டுமே வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததா? அல்லது விபத்தில் மொசாட்டிற்கு பங்கு உள்ளதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts