மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பள்ளிகளுக்கு இடையேயான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அதே பள்ளியில் நடைபெற்றன. இதில், கால்பந்து இறுதிப் போட்டியில் கொளத்தூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் மோதினர்.

இந்த போட்டியில் முதல் பாதியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சரிவர விளையாடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில்அமர வைத்து கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.

அப்போது, பள்ளி ஆசிரியர்களும் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர்.

இப்போது பள்ளி நிர்வாகம் உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts