ஈஸ்டர் அறிக்கை வெளியீடு குறித்து கர்தினால் கருத்து

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிறு ஆராதனை ஒன்றில் உரையாற்றிய பேராயர், முன்னாள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட புதிய குழுவொன்று தற்போது விசாரணை தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

“முன்னாள் அரசாங்கத்தின் இரண்டு அறிக்கைகளில் ஒன்று, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அதே பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது.

ஒரே திருப்பம் என்னவெனில், புதிய அறிக்கையானது, புதிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளது. குறித்த பரிந்துரைகள் தொடர்பான அறிவுரையை முன்னாள் அரசு வழங்கியிருப்பது இதில் தெரிகிறது,'' என்றார். 

இந்த இரண்டு அறிக்கைகளையும் தாங்கள் ஏற்கவில்லை என்று கூறிய பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்துவதாக தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், அது நிறைவேறுமா என்பதைக் காண திருச்சபை காத்திருப்பதாகவும் கூறினார். 

2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கர்தினால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று அம்பலப்படுத்திய கம்மன்பில, முன்னாள் பொலிஸ் அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கைகள் பரிந்துரைக்கின்றன என்றார். 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அண்மையில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் SDIG ரவி செனவிரத்னவையும், மத்திய குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வுப் பணியகத்தின் பணிப்பாளராக முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவையும் நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts