கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பரப்பைச் சிதைத்து, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் மகாவலி அதிகாரசபையின் 'L' வலயத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா (Kiul Oya) திட்டத்திற்கு எதிராக இன்று திங்கட்கிழமை (02) பாரிய கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து உணர்ச்சிப்பூர்வமாக ஆரம்பமான போராட்டப் பேரணியானது நெடுங்கேணியிலிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

 

மகாவலி 'எல்' (Mahaweli L Zone) வலயத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இத்திட்டம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் ஒரு "திட்டமிட்ட குடியேற்ற 

நடவடிக்கை" எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

 

வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலில் திரண்ட மக்கள், "கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம்", "எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

 

இப்பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சாந்தி சிறீஸ்கந்தரசா, மு.சந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரான க.துளசி, சிறீரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டார்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனா்.

 

கிவுல் ஓயாத் திட்டத்தின் மூலம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லையோர கிராமங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்ற அரசு முயற்சிப்பதாகவும், இதன் மூலம் வடக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்கள் பௌத்த மயமாக்கப்படுவதாகவும் தமிழ் தரப்பு நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகிறது.

Related Posts
©   Thedipaar

கஞ்சா சாரதி கைது!