கியூபாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டிற்கான தனது விமான சேவைகளை ஏர் கனடா (Air Canada) நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்கள் மற்றும் பிராந்திய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கியூபா பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கியூபா, கனேடிய சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எனினும், கியூபா செல்லும் விமானங்கள் மீண்டும் கனடா திரும்புவதற்குத் தேவையான எரிபொருளை அந்நாட்டில் பெற்றுக்கொள்வதில் தற்போது கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட வெனிசுவேலா எண்ணெய் தாங்கிகள் கைப்பற்றப்பட்டமை மற்றும் கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை ஆகியன இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளன.
விமான சேவைகள் நிறுத்தப்பட்ட போதிலும், தற்போது கியூபாவில் தங்கியுள்ள சுமார் 3,000 கனேடியர்களைப் பாதுகாப்பாக தாய்நாடு அழைத்து வருவதற்கு ஏர் கனடா நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் விசேட விமானங்கள் மூலம் இவர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் கியூபா ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், ஏர் கனடாவின் இந்த அறிவிப்பு அந்நாட்டின் சுற்றுலாத்துறையைப் பாதிக்கும் என அஞ்சப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Font size:
Print
Related Posts
