தனது பராமரிப்பில் இருந்த இளம் சிறுவர்கள் மற்றும் முதியவர் உள்ளிட்ட பலரை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், லண்டனைச் சேர்ந்த வின்சென்ட் சான் (45) என்பவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலான உத்தரவை லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு லண்டனில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் பாலர் பாடசாலையில் பணியாற்றிய வின்சென்ட் சான், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த கோரச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அவர் மீது சுமத்தப்பட்ட 56 குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவத்தில், இரண்டு வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குழந்தைகளைத் தவறான முறையில் படம் பிடித்தமை, பாலியல் வன்கொடுமை மற்றும் மிக மோசமான வகை பாலியல் படங்களை உருவாக்கியமை போன்ற கடுமையான குற்றங்கள் இதில் அடங்கும்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வின்சென்ட் சானுக்கு "சிறு குழந்தைகள் மீது ஆழமான பாலியல் மோகம்" இருப்பதாகக் குறிப்பிட்டு, அவர் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைக்கு பின்னர், 18 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், விடுதலையான பிறகும் அவர் எட்டு ஆண்டுகள் தீவிர கண்காணிப்பில் (Extended Licence) இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர், "எங்கள் மகளின் எதிர்காலம் இந்தச் சம்பவத்தால் எப்படிப் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலேயே நாங்கள் ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம்" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த மெட் பொலிஸார், தங்கள் வரலாற்றிலேயே மிகவும் "கொடூரமான மற்றும் சிக்கலான" வழக்குகளில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளனர்.
சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தாலும், வின்சென்ட் சான் வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்படுவார் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Font size:
Print
Related Posts
