இஸ்ரேலின் தெற்குப் பகுதியை இலக்கு வைத்து ஏமன் நாட்டின் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் இரண்டாவது முறையாகப் பாரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஹவுதி அமைப்பின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரி (Yahya Saree) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இஸ்ரேலின் முக்கிய இராணுவ நிலைகளை நோக்கிப் பெருமளவிலான க்ரூஸ் ஏவுகணைகள் (Cruise Missiles) மற்றும் ட்ரோன்கள் (Drones) ஏவப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் இராணுவ நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"தாங்கள் நிர்ணயித்த இலக்குகளை இந்தத் தாக்குதல் வெற்றிகரமாகச் சென்றடைந்தது" என ஹவுதி தரப்பு மார்தட்டியுள்ளது.
முன்னதாக, ஈரானுடன் போர் வெடித்த பிறகு இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட முதல் ஏவுகணையைத் தடுத்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஹவுதிகளின் இந்த இரண்டாவது சுற்றுத் தாக்குதல் மிகத் தீவிரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஹவுதிகளின் இந்தத் திடீர் உள்நுழைவு, இஸ்ரேலுக்குப் பலமுனைப் போர் (Multi-front war) நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன், ஈரான், லெபனான் என மூன்று திசைகளில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுவதால், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு பாரிய யுத்த பூமியாக மாறியுள்ளது.
Font size:
Print
Related Posts
