ஹாமில்டன் பகுதியில் டெஸ்லா கார் ஒன்று விபத்துக்குள்ளாகி, மின் கம்பத்தைப் பிடித்து வைத்திருக்கும் கம்பியில் ஏறி செங்குத்தாக (Vertical) நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 4-ம் தேதி காலை இந்த விபத்து நடந்துள்ளது. ஹாமில்டனில் உள்ள ஹைவே 5 மற்றும் ராக் சேப்பல் ரோடு சந்திப்பு அருகே விபத்து நிகழ்ந்தது. கார் ஓட்டுநர் இடதுபுறமாகத் திரும்ப முயன்றபோது, சாலையில் இருந்த ஈரப்பதம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் இரும்பு வடக் கயிற்றில் (Guy wire) ஏறிவிட்டது. இதனால் கார் அப்படியே செங்குத்தாக நின்றது.
இந்த காரை மிசிசாகாவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஓட்டி வந்தார். விபத்தில் கார் மிக மோசமான நிலையில் நின்றாலும், அந்தப் பெண் எந்த காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மழை அல்லது பனி காரணமாக சாலைகள் ஈரமாக இருக்கும்போது, ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ஒன்டாரியோ மாகாண போலீசார் (OPP) அறிவுறுத்தியுள்ளனர்.
மின் கம்பத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என மின்சார வாரியம் ஆய்வு செய்தது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
