உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்த நாடு மீது கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்த உக்ரைனுக்கு ஆயுத உதவியை செய்ய முன்வந்தார் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். இந்த விவகாரத்தில் இந்தியாவின் உதவியையும் நாடினார் உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கி.இந்தியா நடுநிலையுடன், இருநாட்டிடமும் அமைதிக்கான பேச்சுவார்த்தையை நடத்தியது.இதனிடையே அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று, ஜனாதிபதியானார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் கடைபிடித்து வந்த கொள்கையை அடியோடு மாற்றினார் டிரம்ப். ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்டு தரமுடியாது, நேட்டோவில் உக்ரைனுக்கு இடம் அளிக்க முடியாது என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும் உக்ரைனுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவுக்கு பிரதிபலனாக அந்த நாட்டில் உள்ள அரிய வகை கனிம வளங்களை காலவரையின்றி வெட்டி எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் புதிய நிபந்தனையை விதித்தார். ஆனால் ஜெலன்ஸ்கி இதற்கு பணிந்து கொடுக்கவில்லை. இதனால், வெள்ளை மாளிகையில் இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது வாக்குவாதம் கூட ஏற்பட்டது. இந்த நிலையில்தான், உக்ரைனுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. போரை நிறுத்தும் நடவடிக்கையாக நிதி உதவி நிறுத்தப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.