பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக ஸ்டார்பக்ஸ் தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020-ம் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் டெலிவரி டிரைவராக பணியாற்றி வரும் மைக்கேல் கார்சியா என்பவர், அங்குள்ள ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் டீ பார்சல்களை வாங்கியுள்ளார். உணவக ஊழியர் சூடான டீ கப் பார்சலை, காரில் இருந்த மைக்கேலிடம் வழங்கியுள்ளார். ஆனால் அந்த டீ கப் சரியாக மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.மைக்கேல் அதை பெற்றபோது எதிர்பாராத விதமாக சூடான டீ அவரது மடியில் கொட்டியது. காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த மைக்கேல், வலி தாங்க முடியாமல் அலறினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மைக்கேலின் தொடைப் பகுதி மற்றும் ஆணுறுப்பில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேலுக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த பாதிப்பிற்காக இழப்பீடு கோரி மைக்கேல் கார்சியா, லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தீக்காயங்களால் மைக்கேலுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டார்பக்ஸ் உணவக ஊழியரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மனுதாரர் மைக்கேல் கார்சியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.