அடுத்த வாரம் புதுமனை புகுவிழா: திடீரென அடியோடு இடிந்த வீடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்டது ஆட்டுப்பட்டி பகுதி. இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியுள்ளது. இதையடுத்து, இந்த பகுதியில் பலர் வீடு கட்டி குடியேறி வசித்து வருகின்றனர். இதில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும் அரசு பட்டா நிலம் வழங்கியுள்ளது. 

கணவரை இழந்த அவர் தனது மகள் சித்ரா மற்றும் கார் ஓட்டுநரான தனது மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சாவித்திரி அரசு தனக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவில், 3 அடுக்குமாடிக் குடியிருப்பு காட்டி வருகின்றார். 

பணிகள் நிறைவடைந்து, வண்ணம் பூசப்பட்ட இந்த குடியிருப்பின் புதுமனை புகுவிழா வரும் பிப்ரவரி 1ம் தேதி நடத்த சாவித்திரி குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

இதனிடையே, சாவித்திரி வீட்டின் பின்பகுதியில் உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையாளர் ஈடுபட்டு வருகின்றனர். 

சாவித்திரி வீட்டின் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தபோது அவரது வீடு எதிர்பாராத விதமாக லேசாகச் சாய்ந்துள்ளது. 

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள், அந்த கட்டடத்தின் அருகே இருந்து விலகி ஓடினர். அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த 3 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு முழுவதுமே சரிந்து வாய்க்காலுக்குள் விழுந்தது.

நல்வாய்ப்பாக குடியிருப்பிலும், அதனருகில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

Related Posts