கியூபெக்: கனடாவின் கியூபெக் மாகாணத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாயமான மூன்று பேரின் உடல்கள், விபத்து நடந்த ஏரியில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக மாகாண காவல்துறை அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20) கியூபெக்கின் வடக்கு கடற்கரை பகுதியில் மருத்துவப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஓர் உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவர் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 25) இரவு, காவல்துறையின் நீருக்கடியில் தேடும் பிரிவினர், விபத்து நடந்த ஏரியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, காணாமல் போன மூன்று பேரின் சடலங்களையும் கண்டெடுத்தனர். இந்த விபத்து குறித்து, Airmedic நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் மற்றும் ஓர் நோயாளி என மொத்தம் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த தினத்தன்று, மருத்துவப் போக்குவரத்து சேவைக்காகவே இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் Airmedic நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்து குறித்து கனடிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Canadian Transportation Safety Board) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.